நேற்றுப் பயணத்தில் ஆழியாள் மொழிபெயர்த்திருக்கும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” என்கிற அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகளின் தொகுப்பை வாசித்தேன். பலவிடயங்களைப் பேசு பொருளாக்கக்கூடிய கவிதைகள் நிறைந்த நூல்.
ஒரு நீண்ட பயணத்தை முடித்து வீடு வந்திருந்தேன். படிப்பதற்காக கொழும்புக்குச் சென்றதிலிருந்து என்னவோ நான் வீட்டுக்கு விருந்தினன் போல மாறிப் போய்விட்டேன். மாதம் ஒருமுறையோ, சிலவேளை இருமாதத்திற்கு ஒருமுறையோதான் வீடு. இந்த ஏழு வருடங்களும் அப்படித்தான் கழிந்திருக்கிறது. இன்றும் அப்படித்தான் வீட்டுக்கு வந்தேன். வீட்டாரின் வழமையான எல்லாவற்றையும் தாண்டி எனது கதிரையில் வந்து அமர்ந்தேன். இந்தக் கதிரை இன்னாருக்கு என வீட்டில் யாருக்கும் பட்டயங்கள் எழுதியிருக்கவில்லை ஆனாலும் நான் வீட்டிலிருக்கும் பொழுதில் அது என்னுடைய கதிரைதான். அதனால்த்தான் வீடு வந்ததும் முன்னுக்கே இருந்த நான்கு கதிரைகள் தாண்டி அந்தக் கதிரையில் வந்து அமர்ந்தேன். அமர்ந்து கொஞ்ச நேரம் ஆகியிருக்கும். எனதருகே வந்தது எங்கள் வீட்டுப் பூனை. நான் எப்போதும் அதை என்னுடைய பூனையாகக் கொண்டாடியதில்லை. அதுவும் தான். பசித்தால் அருகில் வரும் நான் உணவு வைப்பேன். அவ்வளவுதான் எங்கள் உறவு. பூனை எங்கள் வீட்டிற்கு வந்த பன்னிரண்டு வருடங்களில் இது மாறியிருக்கவில்லை. இன்று மாறியது. எனதருகில் வந்து எனது முகத்தை ஒரு கணம் பார்த்தது. நானும் பார்த்தேன். அதன்...
எனக்குப் பிடிக்காதவொரு புத்தனை எனது மேசையில் வைத்திருக்கிறேன். இரண்டங்குல உயரம் பழுப்பு வண்ண உடலை உலோக வண்ணத் துணியால் போர்த்திய ஒரு சிறிய புத்தன். அமர்ந்தபடி அமைதிசூழந்த கண்களின் கீழே புன்னகை பூக்கும் உதடுகளால் கதை பேசும் எனக்குப் பிடிக்காத என் மேசைப் புத்தன் கதை பேசும் உதடுகளால் தினமும் பொய் பேசுகிறான் என்னிடம். அமைதி தொலைந்து மேசைமுன் அமரும் என்னிடம் அவன் சொல்லும் அந்தப் பொய்கள் கொடுமையானவை. "பற்றற்றிரு... அமைதி காண்பாய்" "அமைதியை உள்ளே தேடு..." "கர்மா... நீதான் காரணம்..." புன்னகையுடன் இத்தனை வலிமிகு சொற்களைச் சொல்ல அவனால் எப்படி முடிகிறதோ உலகென்றொன்று இருப்பதையும் ஒடுக்குமுறைகள் நடப்பதையும் ஒரு சொல்லாலும் சுட்டாது என்னை பற்றறிருக்க சொல்லுகிறான் கண்களை என்றைக்கும் திறந்திராத என்னை என்றுமே கண்டிராத என் மேசைப் புத்தன். நல்லவேளை அவன் வெறும் புத்தனாய்ப் போனான். பொய்களை உதறி என்னால் என்னால் நடக்க முடிகிறது. என் மேசைப் புத்தன் புத்தபெருமானாய் போயிருந்தால்...
Comments
Post a Comment