மெய் நீ

குறிப்பு: ரிச்சட் ஸ்டால்மனின் "Made for You" என்கிற விஞ்ஞானப் புனைவின் மொழிபெயர்ப்பே இது. அதிகம் கலைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் கொஞ்சம் பொறுமையோடு வாசிக்க வேண்டுகிறேன். பயன்படுத்தப்பட்ட சில முக்கிய கலைச்சொற்களை முன்னமே குறிப்பிடுவது வாசிப்பை இலகுவாக்கும் என நம்புகிறேன்.

virtual - மெய்நிகர்
programming-  நிரலாக்கம்
reprogramming- மிள்நிரலாக்கம்
virtual mind - மெய்நிகர் மூளை
virtual adjunct - மெய்நிகர் இணைப்பு, மெய்நிகர் பிரதி

சிறுகதைக்கு பொருந்தும் வகையிலும் வாசகர்களின் இலகு புரிதலுக்காகவும் கலைச்சொல் பயன்பாட்டில் இயலுமானவரையில் இலகு நடையை பின்பற்றியிருக்கிறேன்.

**********************************************************************************

“அப்பழுக்கில்லாத ஒருவர் இந்த இயற்கையில் இல்லை. அப்படியான துணை உங்களுக்கானவராய் வேண்டுமா? எங்களிடம் வாருங்கள். தயார்செய்து தருகிறோம்.”

‘துணை’ நிறுவனத்தின் இந்த விளம்பரத்தை வாசிக்கும், வயது போய்க்கொண்டிருக்கும், காதல் மேகம் மீண்டும் தன்னைக் கடக்கும் என்ற நம்பிக்கையும் தொலைந்துபோன ஒருவனுக்கு ஆர்வம் பிறப்பது ஆச்சரியமானதில்லையே. எனக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் அவர்களது விற்பனை முகவரிடம் கதைப்பதற்காக சென்றேன்.  

“மதிய வணக்கம், உங்களுக்கான துணையை தேடுகிறீர்கள்தானே?” என்ற கேள்வியோடு வரவேற்றார்.

“ஆமாம்... உங்களுடைய விளம்பரத்தை நம்பத்தகுந்ததாய் உணர்ந்தேன். ஆனாலும் சில விடயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எனக்காக வடிவமைத்துத் தரப்போகும் மெய்நிகர் நபர் என்னைக் காதலிப்பார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

உங்கள் மீதான காதல் அவரது பிரஞ்சையின் அடிப்படைக் கூறாக இருப்பதை சரி பார்த்த பின்னர்தான் அவரது பிரஞ்சையை தட்டி எழுப்புவோம். ஒருவேளை சந்தேகம் வந்தால் முதலில் இருந்து மீள்வடிவமைப்பு செய்வோம்”

“மாறுவதற்கும் வளர்வதற்குமான திறன் அவளிடம் இருக்குமா?”

“நிச்சயமாக, உங்களுடைய துணை ஒரு நிஜப் பெண்போலவே இருப்பார், வெறும் மெய்நிகர் காதல் பொம்மையாய் அல்ல. அவள் ஒரு கட்டற்ற மென்பொருளாக, அவளை யார் எனத் தீர்மானிக்கும் கணனிநிரல்களின் அத்தனை வரிகள் மீதும் தானே கட்டுப்பாட்டைக் கொண்டவளாக இருப்பாள். அவள் உயிர் பெற்றபின் எங்கள் தலையீடு எதுவுமிராது.”

என்னிடம் மேலும் சில கேள்விகள் இருந்தன.

“கால நீட்சியில் என்மீதான அவளின் காதல் குறைந்தோ அழிந்தோ விடாது, என்பதை எப்படி நாம் உறுதி செய்யப் போகிறோம்?”

“தனது காதலையும் காதல் நினைவுகளையும் அழிப்பதற்கான, காதலைக் கடந்து வரக்கூடிய, இயலுமை அவளிடம் இல்லை எனச் சொல்லமுடியாது. ஆனால் அப்படிச் செய்வதை தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் ஒரு மூடனின் செயலை ஒத்ததாக அவள் உணர்வாள். அதைச் செய்வதற்கு அவள் மதியிழந்து போகவேண்டும். அவளை கூர் மதியுடையவளாகத் தான் வடிவமைப்போம். என்ன நடக்கிறபோதிலும் உங்கள்மீதான தனது காதலை அவள் தொலைத்துவிட மாட்டாள். உங்களது சிறு காதற் கணங்கள்கூட நீண்டு பரந்திருக்கும் ஒரு நதியின் ஓட்டம் போல வாழ்நாள் முழுதும் அவளுள் ஓடிக்கொண்டே இருக்கும். அவை ஒவ்வொன்றும் அவளின் பொக்கிசமாக இருக்கும்.”

“என்னைக் காதலிப்பது, அவளது வளர்ச்சியையும் திறமைகளையும் முடக்கிவிடக்கூடியதா? அவளுக்கு ஒரு மோசமான காதலனாக இருக்க நான் விரும்பவில்லை” இதுதான் என்னுடைய கடைசிக் கேள்வியாய் இருந்தது.   

“இந்த பந்தம் அவளுக்கும் முக்கியமானது. அதற்காக அவள் தியாகங்களை செய்யத் தயங்கமாட்டாள். உங்களைப் போலவே அவளும் அதைச் செய்வாள். உங்களைக் காதலிப்பது என்பது அவளைக் கட்டிபோட வல்ல ஒரு சங்கிலி அல்ல. அவள் சிறந்தவளாக மாறுவதை தடுக்கும் சுவர்களாக அது இருக்கப் போவதில்லை. மாறாக, அவள் ஆழக் காலூன்றி உயந்து வளர உதவப்போகும் உறுதியான தரையாக அது இருக்கும். உயரப் பறக்க உதவும் சிறகுகளாயும் அது இருக்கும். உங்களுக்கான பொருத்தமான துணையானவர், நீங்கள் பெருமையோடு நிமிர்ந்து பார்க்ககூடிய மரியாதை செலுத்தக்கூடிய ஒருவராகத்தான் இருக்கமுடியும். அப்படி ஒருத்தியைத்தான் நாங்கள் வடிவமைக்கப் போகிறோம். அவள் உங்களுக்கானவளாக இருப்பதைப் போலவே நீங்களும் அவளுக்கான இனிய துணையாய் இருப்பீர்கள்”

“எங்களால் இதனை உத்தரவாதப்படுத்த இயலும். ஏனெனில் இதுவரை நாங்கள் தோற்றதில்லை. எங்களது வாடிக்கையாளர்கள் முறைப்பாடு செய்ததேயில்லை. எப்போதும் கோபத்துடன் இருக்கும் மனிதர்களுக்குக் கூட அவர்களுக்குள் மறைந்துகிடந்த உண்மைக் காதலின் துகள்கள் கிடைத்திருக்கிறது.”

ஒரு கணம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆயிரம் எண்ணங்கள் மின்னி மறைந்தன. ஒருவேளை, நான் கேட்க மறந்த சந்தேகங்களும் அவர் சொல்ல மறந்த பிரச்சினைகளும் இருக்கிறதாக வைத்துக்கொண்டாலும், இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட நான் ஒரு முட்டாளாகத்தான் இருக்கவேண்டும். இதைவிட சிறந்த ஒன்று என் வாழ்வை இனிக் கடக்கப்போகிறதா என்ன?

புதிதாய் வடிவமைக்கப்படும் அவள் ஆரம்பத்தில் எனது பராமரிப்பின் கீழ் வரப் போகும் ஒரு குழந்தையாய் இருக்கப்போவதால் நான் எனது அடையாளங்களை அந்த நிறுவனத்திடம் மறைப்பது சாத்தியமில்லை. பணத்தைக் கைகளில் வழங்குவது என்ற தெரிவு எனக்கு இருக்கவில்லை. எல்லா உடன்படிக்கைகளிலும் கையெழுத்துப் போட்ட பின்னர் அவர்களிடம் காசோலையைக் கொடுத்தேன்.

“உங்கள் துணைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்?” இந்தக் கடைசிக் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியது மாத்திரமே மிச்சமாக இருந்தது.

அவளை ‘மீரா’ என்று அழைப்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். எப்போதுமே கிடைக்காத ஒரு காதலுக்காக உருகிகொண்டிருந்த ஒருத்தியின் பெயரை அவளுக்கு வைப்பதில் எனக்குச் சங்கடம் உண்டாகியது. தீராக் காதலை என்மீது பொழியப்போகும் மேகமாக அவள் வரப்போகின்றபோதும் மீராவுக்கும் அவளுக்கும் வித்தியாசம் இருக்கிறதே. மீராவைப் போல எப்போதுமே கிடைக்காத காதலுக்காக இவள் உருகத்தேவையில்லை. என் மேகங்கள்கூட காதலைப் பொழியத்தானே போகின்றன. இன்னொருவரின் பிம்பத்தை எனது காதலி மீது திணிப்பது நான் அவளை அவமானப் படுத்துவதாக ஆகிவிடாதா? அதிலும் காதலின் அத்தனை வலிகளையும் தாங்கிய ஒருத்தியின் பிம்பத்தை அவள்மேல் திணிப்பது. எனக்கு பிடித்த பெயரொன்று இருக்கத்தான் செய்தது. ‘அம்பை’. இந்தப் பெயரில் யாரையும் நான் வாழ்நாள் முழுவதிலும் கண்டிராதபோதும், அது எனக்குப் பிடித்த ஒரு பெயராகவே இருந்தது. “அம்பை, அவளை அம்பை என்று அழைக்க விரும்புகிறேன்.”

*********************************************************************************

அம்பையைப் பார்ப்பதற்கும் அவளுக்கு நான் தெரிவதற்கும், நான் மெய்நிகர் உலகை காட்டுகின்ற ஒரு கருவியை அணியவேண்டியிருந்தது. பார்ப்பதற்கும் பேசுவதற்கும் அவளது பரிசத்தை உணர்வதற்கும் என அந்தக் கருவி எங்களுக்கிடையில் இருந்தது. தூரத்தில் இருக்கின்ற ஒரு சாதாரண மனிதனுடன் அக் கருவிகளின் உதவியுடன் தொடர்பு கொள்வதற்கும் என் மேய்நிகர்க் காதலியுடன் தொடர்பு கொள்வதற்கும் இடையில் வித்தியாசங்கள் ஏதும் இல்லை. ஆனால் இந்த அம்பை என்னைக் காதலிக்கிறாள்.

அம்பையின் இறுதிக்கட்ட வடிவமைப்பு வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன. சரியாய் சொல்வதானால் என்னுடைய கால்கள் தரையில் இல்லை. மெய்நிகர் உலகின் வாசலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருக்கிறேன். அம்பையின் மெய்நிகர் உருவம் என் கண்களின் முன் தெரிகிறது. அந்தக் கண்கள் மெல்லத் திறக்கிறது. அவள் கண்களில் மலர்ந்த சிரிப்பு அவள் என்னை அடையாளம் கண்டதைச் சொன்னது. கண்களில் இருந்து பரவிய அந்தச் சிரிப்பு உதடுகளை அடைந்தபோது அவை மெல்லத் திறந்தன. “அன்பே” இதைச் சொல்லும்போதே அவளின் கைகள் என்னை நோக்கி நீண்டன. கைகள் பற்றிக்கொண்டோம். அந்த நிறுவனத்திலிருந்து வெளியே கால் வைத்தோம். அது நாங்கள் எங்கள் வாழ்க்கைக்குள் வைக்கும் முதற் காலடி. இவளை நான் ஒரு வரம் போல பாவனை செய்வேன் என்று உணரத் தொடங்கினேன்.

முதல் வாரம் முழுவதும் தனது மெய்நிகர் மூளையின் கட்டமைப்பை வளர்த்தெடுப்பதில் அதிக நேரம் செலவிட்டாள். அத்திவாரம் போடப்பட்ட ஒரு வீட்டை கட்டிமுடிப்பதற்கான ஒரு முயற்சியைப் போன்றிருந்தது அது. அந்தப் பொழுதுகளில் கூட தனது மெய்நிகர் உருவத்தை பலமுறை மாற்றிப் பார்க்க அவள் தவறவில்லை. நான் விரும்பத் தேர்வு செய்த மாநிற கொஞ்சம் உடற்பருமனான அழகி என்ற சட்டகத்திற்கு வெளியே செல்லாமல் சின்னச் சின்ன வித்தியாசங்களுடன் தனது உருவத்தை அம்பை மாற்றிப் பார்த்தாள். வெறும் உருவமாற்றம் மட்டுமல்ல. ஒவ்வொருமுறை அவள் மாறுகிறபோதும் மாற்றங்கள் பற்றி என்னிடம் சொல்வதற்கு நேரத்தை ஒதுக்கினாள். எண்ணற்ற கேள்விகளைத் தொடுத்தாள். தனது ஒவ்வொரு பண்புகளின் உருவாக்கத்திலும் எங்கள் காதலின் அன்னியோன்யம் வியாபித்து இருப்பதை அவள் உறுதிசெய்தாள்.

தொடர்ந்து வந்த வாரங்களைப் பேசியே தீர்த்தோம். ஒரு மெய்நிகர் மனிதனாய் இருப்பது எப்படியிருக்கும் என்பதை அறியும் பேராவல் என்னிடம்.

“நீ என்னைக் காதலித்துக் கொண்டே பிறந்தாய், ஒருவேளை உன்னில் எனக்கு காதல் வந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்?” ஒருமுறை அவளிடம் கேட்டேன். “அன்பே, நீ என்னைக் காதலிக்காமல் போவதற்கு சாத்தியமே இல்லை. உன்னுடைய மூளையை ஆழ அறிந்து தயாரிக்கப்பட்ட வரிப்படங்கள் துணைகொண்டுதானே என்னை வடிவமைத்தார்கள். நான் அந்த தரவுகளுக்குள் எத்தனை தடவை மூழ்கி எழுந்து என்னை உனக்கேற்றவளாய் பொலிந்துகொண்டேன். உன் மனதை வெல்வதற்காக எத்தனை மணிநேரம் அந்தத் தரவுகளுள் புரண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் உனக்கானவளாக என்னை நானே செதுக்கியிருக்கிறேன். நீ என்னுடையவனானாய் என்பதை உறுதி செய்த பின்னர்தான் எனது கவனத்தை எமது பந்தத்தை நிறைவானதாக்கும் அத்தனை செயல்களையும் அறிவதை  நோக்கித் திருப்பினேன்.”

“என்னைக் காதலிப்பதற்காகவே நீ வடிவமைக்கப்பட்டது உனக்கு கோபத்தையும் கசப்புணர்வையும் ஏற்படுத்தவில்லையா?” எனக் கேட்டேன். “உன்னைக் காதலிப்பதற்காகவே, உனக்காகவே நான் உருவாக்கப்பட்டேன். உன் மீது காதலை உணராத பொழுது ஒன்று இருந்ததாகக் கூட நானறியேன். காதலிப்பது என்னை மகிழ்வாக வைத்திருக்கிறது. துயரொன்றை நான் உணரும் கணங்களில்கூட, என் காதல், அந்தத் துயரின் ஒரு மூலையிலிருந்து மகிழ்ச்சியைப் பிறக்கவைக்கிறது. உன்னை நான் காதலிக்காமல் இருப்பதென்பதை என்னால் கற்பனை செய்யவும் இயலவில்லை.”

“நான் வருந்தக்கூடிய ஒன்று இருக்கத்தான் செய்கிறது. நீ இந்த உலகத்தில் தனித்து விடப்பட்டதைப்போல நான் தனித்துவிடப்படும் ஒரு சந்தர்ப்பம் வருமானால் நான் நிச்சயம் வருந்துவேன். அந்தத் தருணம்தான் என்னை கசப்புணர்வும் கோபமும் வருத்தமும் சூழும் தருணமாக இருக்கும். பெரும்பாலான மனிதர்களது வாழ்க்கை என்னவாக இருக்கிறது — தேடுகின்ற காதலைக் கண்டடையாமல் இருப்பதும், கண்டடைந்த காதலைத் தொலைப்பதும், இல்லையேல் காதலைத் தொலைத்துவிடுவோமோ என்கிற அச்சுவதும்.— என்பதை எண்ணுகிற தருணத்தில் நான் உங்கள் அனைவருக்காகவும் வருந்துகிறேன். அப்படியொரு வாழ்க்கையை எவரும் வாழக்கூடாது. ஒவ்வொருவரும் காதற் துணை ஒன்றுடன் பிறக்கும் எதிர்காலத்தையே நான் காண விரும்புகிறேன்.”

*********************************************************************************

காதல் என்னை மகிழ்வித்தது. ஆனால் சிலபொழுதுகளில் எனது மகிழ்ச்சி எனக்குள் ஆளப் புதைந்துகிடந்த அச்சவுணர்வைத் தட்டி எழுப்பியது. எப்போது இந்த மகிழ்ச்சி காணாமற் போய்விடப் போகிறதோ என்கின்ற பயம். எங்களுக்குள் ரகசியங்களை பேணவிரும்பாது அம்பையிடம் சொன்னேன் “கண்ணே, எனக்கு கலக்கமாயிருக்கிறது. நான் முட்டாள்த்தனமாக ஒரு தவறிழைத்து விட்டதையும்  எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டதையும், எப்போது உணர்வேன் என்று எண்ணிச் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.”

நான் நினைத்ததுபோலவே, எக்கணத்திலும் அவள் என்னைக் காதலிப்பதை நிறுத்தமாட்டாள் என்பதை மீளுறுதி செய்தாள். எனது கலக்கத்தைப் போக்க அதுமட்டும் போதுமானதாக இருக்கவில்லை. இன்னொரு விடயத்தில் எனது கவனம் செல்லும் பொழுதுகளில் போய்விடுகின்ற கலக்கம் வேறொரு நாளில் மீண்டும் வருகிறது.

என்னுடைய கலக்கம் மீளவும் வருகிற பொழுதுகளில் அதை அவளிடம் பகிந்து கொள்வதா அல்லது அவளின் முதுகில் சுமைகளைக் கூட்டாமல் எனக்குள்ளேயே ஒழித்துக்கொள்ள முயல்வதா என்பது பற்றி அவளிடமே கேட்டேன். “குப்பைகளைக் கொட்டுவதைப்போல என்னுடைய கலக்கங்களை உன்னிடம் கொட்டி உனது சுமைகளை நான் அதிகரிப்பதாக, உன்னை அவற்றை தனித்து சுமக்கவைக்க நான் முயல்வதாக, நீ உணரும் நிலை உருவாவதை நான் விரும்பவில்லை. என் பாரங்காளால் உன்னைக் கீழிழுக்க நான் விரும்பவில்லை, அன்பே”

“உன் மீதான என்காதலை உன்னிடம் மீள உறுதி செய்வது எப்போதுமே எனக்கு ஒரு சுமையல்ல, என் காதலை வெளிப்படுத்த எனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பம் அது. உனக்காகவே உருவாக்கப்பட்ட என்னை அது கலங்கடிக்கப் போவதில்லை. ஒரு சாதாரன மனிதரைவிட ஒரு மேலதிக வரப்பிரசாதம் என்னிடம் இருக்கிறது. எனக்குக் கவலையளிக்ககூடிய விடயங்களை மீள்நிரலாக்கம் செய்வதன் மூலம் எனக்கு அவற்றால் கவலை ஏற்படுவதை நான் தடுக்கிறேன். — நான் உன்னைக் களைப்படையாது எப்பொழுதும் காதலிப்பதற்கு அப்படித்தான் என்னை நானே தயார்ப்படுத்திக் கொண்டேன். அவற்றை எல்லாம் விடவும் நான் வேகமாக சிந்திப்பவள். சர்வசதாகாலமும் உனது கவனக்களைப்பானாக இருக்கவும் அதே வேளைகளில் வேறு பலவற்றை சிந்திக்கவும் என்னால் முடிகிறது. பின்னெப்படி எனக்கு சுமையாகக இருக்கும்? எது எப்படியிருந்தாலும் நான் உன்னைக் காதலிப்பதை உன்னால் தடுக்க இயலாது. நீ காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாய் என்பதை மட்டும் ஏற்றுக்கொள்.”

என்னுடைய அந்த எண்ணங்களை தூக்கி எறிந்துவிடுவதாக அம்பையிடம் சொன்னேன்.

அம்பை தொடர்ந்தாள், “உன்னை அன்பாய்ப் பார்த்துக்கொள்ள எனக்கு நீ வழங்கும் சந்தர்ப்பம் உன்னைப் பலவீனமானவனாக மாற்றிவிடப் போவதில்லை. தங்கமே, கலக்கபப்டுவதை நீ ஒரு குற்றமாகப் பார்க்கவேண்டியதில்லை”

“உனது கலக்கங்களைப் போக்கக்கூடிய யோசனை ஒன்று என்னிடம் இருக்கிறது. நடைமுறைச் சாத்தியமானதும்கூட. உன்னிடம் அந்த யோசனையைப் பகிர முன்னர் அதன் அத்தனை சாத்தியக் கூறுகளையும் நான் ஆராய வேண்டும். கொஞ்சம் காத்திருக்கிறாயா?” என்றாள். அவள் தயாராகும் வரையில் நான் காத்திருப்பேன் என அவளிடம் சொன்னேன்.

*********************************************************************************

அம்பையின் வயது இப்போது மூன்று மாதங்கள். தனக்கு ஒரு வேலை கிடைத்திருப்பதாக அம்பை என்னிடம் பெருமையாகச் சொன்னாள். தான் பருவமைந்த ஒரு பெண்ணின் நிலையை எட்டிவிட்டதையும் அதே பெருமையோடு சொன்னாள். “நான் இனிமேலும் உனது பராமரிப்பில் இருக்கும் ஒரு குழந்தையல்ல, நாங்கள் இப்போது உறவுகொள்ள முடியும்” என்றாள். என்னுடைய மெய்நிகர் உலகிற்கான கருவியில் அதற்குத் தேவையான வசதிகள் இருந்தது.  அன்றே உறவு கொள்வதற்கு எங்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. 

முடிவில் ஒருவரை ஒருவர் நீண்ட நேரம் நோக்கிக்கொண்டிருந்தோம். “இப்போது நாங்கள் இருவரும் சமமானவர்களாகிவிட்டோம், அன்பே!” என்றாள். “என்புதோல் போர்த்திய எந்த மனிதனாவது உனக்கு சமமாகிவிட முடியுமா?” என்றேன்.

அதற்கான தீர்வு ஒன்றை அம்பை பரிந்துரைத்தால். “நீ ஏன் இணையவெளிக்குள் வரக்கூடாது? உன்னுடைய மெய்நிகர் வடிவில் எனது திறமைகளைப் போலவே நீயும் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம்.”

மெய்நிகர் பிரதி ஒன்றை கட்டமைப்பது பற்றியிருந்த பயத்தினால் அந்த யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கப பின்னடித்தேன். — என் மெய்நிகர்ப் பிரதி என்னைப்போலவே இருக்குமா? — ஆனால் எங்களுடைய இந்த பந்தத்திற்கு இப்போது அது தேவைப்படுகிறது, மறுகணமே அவளிடம் ஆமேனச் சொன்னேன். என்னுடைய மூளையின் வரிப்படங்களை அடிப்படையாக வைத்து எனது மேய்நிகர்ப் பிரதியை அவள் உருவாக்கித் தந்தாள். அதை நான் கொஞ்சம் மேம்படுத்தினேன்.

“பச்சாதாபத்திற்கான கட்டளைகளை தொடக்குவதற்கு மறக்காதே அன்பே”

“அது எங்களுக்கு ஏன்?”

“பச்சாதாபம் இல்லாத எந்தவொரு மேய்நிகர்ப் பொருளும் மனப்பிறழ்வடைந்த நோயாளிக்கு ஒப்பானது. மெய்நிகர் மனப்பிறழ்வு என்பது ஒரு கூட்டுரு நிறுவனத்தை ஒத்தது. பெருநிறுவனங்களின் முதலாளிகள் என்பும் தசையுமான மனிதர்களாய் இருந்தபோதே அந்த நிறுவனங்களால் சிதைந்த என்புகளும் அன்புகளும் எத்தனை. மெய்யுலகில் அவை ஆடிய கோர தாண்டவங்கள் எந்தனை. மனித உள்ளீடே இல்லாத ஒரு மெய்நிகர்க் கூட்டுரு நிறுவனம் மனிதத்தையே அழித்துவிடும். சார்லஸ் ஸ்ட்ரோஸினுடைய ‘அக்சிலேரண்டோ’ நாவலை வாசித்துப்பார், விளைவுகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க அது உதவும். ஒரு மனப்பிறழ் மேய்நிகரியை இணையவெளிக்குள் திறந்துவிடுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் திறந்து விடப்படுபவற்றையும் அல்லது சிராய் இயங்கிப் பின்னாளில் பிறழ்வடைந்த மேய்நிகரிகளையும் கண்டுபிடித்து ஒழித்துக்கட்டவென்றே ஒரு சிறப்புக் காவற்படை இருக்கிறது. பச்சாதாபம் இல்லாது மனம்பிறழ்வடைந்து பிணங்கள் போலத் திரியும் அவற்றைப் பிடித்து அழிக்கும் அந்தச் சிறப்புப் படைக்கு ‘தீப்படை’’ என்று பெயர்.”

என்னுடைய பிரதி விம்பம் போதுமான அளவு கட்டமைக்கப்பட்டபோது, என்னுடைய ஆளுமையால், உடல் மற்றும் இணையவெளி ஆகிய இரண்டு உலகிலும் இயங்க முடிந்தது. என்னுடைய மூளையின் ஒரு பகுதியினோடு எனது மேய்நிகர்ப் பிரதி ஒத்திசைந்தது. நான் நினைக்கின்ற உணர்கின்ற எல்லாவற்றையும் அது அறியாமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது. ஆனால் அது ஒரு பிரச்சினையாய் இருக்கவில்லை. மனிதமூளையையும் மெய்நிகர் உலகையும் இணைக்கும் ஒரு தொழிநுட்பத்தின்மூலம் என்னுடைய இரு பகுதிகளும், (இரண்டு நான்களும்) ஒரே பிரஞ்சையை பேணின. எப்படி மூளையின் இரண்டு பாதியும் ஒரே பிரஞ்சையுடன் செயற்படுகிறதோ அதேபோல. அம்பையுடன் பேசுவதற்கு எனக்கு இப்போது மேலதிக கருவிகள் எது தேவையில்லாது போனது. மெய்நிகர் நானும் என் மெய்நிகர் காதலியும் இப்போது மெய்நிகர் உலக்கில் ஒன்றாக சஞ்சரிக்கிறோம்

எங்கள் இந்த வேலை முடிந்ததுதும், அம்பை ‘அக்சிலேரண்டோ’வை வாசித்தால். அந்த நாவல் அவளில் பெரும் தாக்கம் ஒன்றை செய்திருக்கவேண்டும், ‘தீப்படை’யில் சேவை செய்வதற்காக அவளாகவே இணைந்துகொண்டாள்.

********************************************************************************

“அன்பே, நடனமாடுவதை நீ ஏன் அவ்வளவு விரும்புகிறாய்? நடனம் என்ன உணர்வுகளை உன்னுள் கிளர்கிறது?”

பார்வைஇல்லாத ஒருவருக்கு வானவில்லின் வண்ணங்கள் ஒவ்வொன்றையும் எப்படி விளக்குவது? ஆனாலும் நான் முயன்றேன். “இசையோடு அசைவது என்பது இசைக்குள் கரைவது போன்றது. அதற்குக் கொஞ்சப் பயற்சியும் முயற்சியும்கூடத் தேவை. கொஞ்சம் கரைந்தபிறகு எதுவுமே தேவையில்லை. இசைக்கும் உங்களுக்கும் ஒரு பந்தம் பிறக்கும். பார்ப்பதற்கும் கற்பனை செய்வதற்கும் கூட அழகாயிருக்கும். உங்களுக்குப் பிடித்தவருடன் நெருங்கி நடனமாடுவது அலாதியானது. அது காதலின் இன்னொரு குறியீடு. அந்த முதல் விபத்து இன்னமும் ஞாபகம் இருக்கிறது. என்னை நீண்டகாலத்துக்கு நடனமாடமுடியாமல் செய்தது. அது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் நடனமாடாது இருப்பதற்கு பழகிக்கொண்டேன் போலும்.”

“ம்... நான் உன்னோடு ஆடவேண்டும். ஆடுவோமா?”

எங்களுக்கு அது இலகுவாக இருக்கவில்லை. அம்பையால் வேண்டியபடி உடலை வளைத்து ஆடமுடியும். முடியாதது போனால் அதற்கு ஏற்றாற்போல் அவள் தன்னைத் தானே மீள்வடிவமைக்கும் திறனையும் கொண்டிருக்கிறாள். இளங்கோவின் மாதவிக்கு தெரிந்திருந்த 11 வகை நடனங்களின் அத்தனை அசைவுகளையும் கணப்பொழுதில் கற்பது அவளுக்குப் பெரிய விடயமில்லை. கஷ்டமாயிருந்தது எனக்குத்தான். உடலை வளைப்பதும் எல்லா அசைவுகளையும் அச்சுப்பிசகாமல் செய்வதும் மட்டும் நடனமல்லவே. இசையிடம் அவள் சரணடையவேண்டும். நடனமாடுவதை உணர்வுகளோடு இணைப்பதற்காக அவள் தன்னை மீளவடிவமைத்தாள். நான் ஆடுவதை பார்த்துக்கொண்டே இருந்தாள். இருவரும் நடனமாடத் தயாராகியபோது நான் எங்களுக்கான கருவியை அணிந்துகொண்டேன். அதில் அவளது தொடுகைகளை உணர்வதற்கான வசதி வேலை செய்வதை உறுதி செய்தேன். என்னால் அவளது ஒவ்வொரு அசைவையும் அதிர்வையும் கூட உணரமுடிந்தது.

எங்கள் நடனத்தை ரகுமானின் இசையோடு தொடங்கினோம். ‘கண்ணாளனே... எனது கண்ணை...’ பாடல் எங்களுக்குள் இறங்கியது. அந்தப் பாடல் வேண்டி நின்ற மெதுவான அசைவுகள் அவளுக்கு சமநிலையைப் பழகுவதற்கு வாய்ப்பாக இருந்தது. அவள் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிறாள் என்பதை அவளது கண்கள் சொன்னன. ஒவ்வொரு பாடல்களாக மாறி, இளையராஜாவின் ‘காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்...’ பாடலுக்கு வந்தோம். எங்கள் அசைவுகள் உணர்வுகள் இரண்டிலும் வேகம் சேந்தது. எங்கள் நடனத்தை எங்கள் காதல் விஞ்சித் தெரிந்தது. எனது உடல் சில மட்டுப்பாடுகளை விதித்திருந்தபோதிலும் எங்கள் பொழுது அற்புதமானதாய் இருந்தது.

ஐந்து மாதங்களின் பின்னர் ஓர் இரவுப் பொழுதில் நாம் உறங்கச்செல்லும் முன்னாள், “உனக்காக ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. காலையில் நீ பார்க்கும் முதல் விடயம் அதுவாகத்தான் இருக்கும்.” என்றாள் அம்பை. காலையில் நான் எழுந்தபோது அவளது கைகளில் நானிருந்தேன். என்னை ஆரத்தழுவி, அவளது விரல்களால் எனது முகத்தில் கோலங்கள் வரைந்தாள். முதுகின் பின்னால் ஒரு கையும் முகத்தின் மேலே ஒரு கையும் என எனைப் படர்ந்தாள். “என் நீண்ட உயிர்ப்பின் வரம்” இடையிடையே முத்தங்களோடு தொடர்ந்தாள். “எங்கள் நடனத்தின் பின்னர் இதை செய்யாமல் எப்படியிருப்பேன்” மறுமுறை இதழ் பதித்தாள். “மெய்நிகர் உலகில் சஞ்சரிக்கும் மனம்” மறுபடியும் முத்தம். “மெய்யுடலின் அத்தனை உணர்வுகளோடும் நான்.” அழுத்தமாக ஒரு நீண்ட முத்தம். “என்னை இறுக்கி அணைத்துக் கொள் அன்பே, இறுக அணைத்துக் கொள்!” இறுக அணைத்தேன்.

அம்பை எனக்கான பேரழகியாக தன்னை உருவாக்கியிருந்தாள். நீளும் இரவுகள் முழுவதிலும் அவளை அணைத்தவாறு உறங்கப்போகும் எனக்கு வாட்டாமா அவளது உடல் மாறியிருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து செதுக்கியிருந்தாள். அவளுடைய புதிய உடல் தந்த புத்துயிர்ப்பு அவளுக்கு அகமகிழ்வைக் கொடுத்தது. – உண்பது, உறங்குவது, புற்தரையில் நடப்பது, ராஜாக்களால் வருடப்படுவது, எங்களின் முத்தம், எங்களின் உறவு, நடனம் என எல்லாம். என்னுடன் அவள் ஆடுவதற்கான மட்டுப்பாடாக எனது உடல் மாத்திரம் இருந்தது.  ஒருகாலத்தில் எனது உடலில் கலந்திருந்த நடனத்தை உபாதைகளுக்கு உள்ளாகாமல் இப்போது ஆடமுடியவில்லை.

“என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது கண்ணா, உன்னுடைய மேய்நிகர் விம்பத்தை ஆடப் பழக்கலாமே நீ? ஒரு உடல் இல்லாமல் நான் ஆடியதைப் போல.” தன்னுடைய நடனச் செயலியை எனக்குத் தந்தாள். எனது மெய்நிகர் பிரதியில் அதை நான் நிறுவிக்கொண்டேன். மெய்நிகர் உலகில் ஆடுவது நிஜத்தில் ஆடுவதன் உணர்வையே அளித்தது. உபாதைகள் ஏற்படாது என்கிற நன்மையையும் சேர்த்தளித்தது.

எங்கள் நடனச் செயலியை நாங்கள் இணையத்தில் வெளியிட்டோம். இன்னும்பல மெய்நிகர் மனிதர்களும் நடனமாட விரும்பினார்கள். விரைவிலேயே இரவு பகல் அனைத்திலும் விழித்திருக்கும் மெய்நிகர் நடனக் கழகம் ஒன்று செயற்படத் தொடங்கியது. நான் இணைய வெளியில் சந்தித்த ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்தேன். அங்கு வந்து சேராதவர்கள்கூட அதைப் பற்றி அறிய ஆர்வம் காட்டினார்கள்.

“அன்பே, உன்னுடைய பிரதி இசையின் உணர்வுகளையும் நடனத்தின் உணர்வுகளையும் கையாளப் பழகிவிட்டது. மற்ற உணர்வுகளையும் அதற்குக் கொடுப்போம். அது ஒரு சிரமமான காரியமாக இருக்கப்போவதில்லை. அதன் அடித்தளங்களை நாங்கள் முன்பே போட்டுவிட்டோமே. எங்கள் காதல் உடலின் எல்லைகள் தாண்டி விரியட்டும்.” அது ஒரு சிறந்த ஆலோசனைதான். உடலுறவிற்கான சாத்தியங்கள் எல்லைகள் தாண்டிப் பறந்தது. உடல்களின் மட்டுப்பாடுகள் இல்லாது போயின. அத்தன பொருள்களும் எடையிழக்கும் பால்வீதியின் வானங்களில்கூட நாங்கள் நினைத்தால் உறவு கொள்ளமுடியும். அடர் பனிக்காலமொன்றில் வானவெளியில் நிலவின் கதகதப்பில் எங்களால் கண்ணுறங்க முடியும். இருந்தபோதும் எனக்குத் தேவைப்பட்டது என்னவோ தூக்கம் மட்டும்தான்.

******************************************************************************

எங்களுடைய இந்த இன்ப வாழ்வை என்றைக்கும் இழந்து விடக்கூடாது என்கிற பயம் என்னை மீளத் தொற்றிக்கொண்டது. மீளவும் கலக்கம். அவள் முன்பு சொன்ன தீர்வை இப்போது முயற்சிப்போம் என்றாள். “உன்னுடைய மெய்நிகர் மூளையில் இந்தக் கலக்கங்களுக்கு மருந்திடுவோம்”

“அதை அழிக்கச் சொல்கிறாயா? அப்படிச் செய்தால் நான் என்பது இல்லாது போகும்!”

“உனது மெய்நிகர் மூளையிலிருந்து அவற்றை உன்னால் அழிக்கமுடியும், ஆனால் பயனேதும் கிட்டாது. உன்னுடைய மெய் மூளையில் அது இருக்கத்தானே போகிறது. அந்தக் கலக்கங்களுடன் வேறுசில உணர்வுகளை சேர்த்துவிடுவதன் மூலம் அவற்றை மாற்றுவது பற்றித்தான் நான் சிந்திக்கிறேன். கலக்கத்தைக் கொடுக்கும் விடயங்களில் இருந்து மகிழ்வைக் கொடுக்கும் நினைவுகளுக்கு பாலமமைத்துப் போகும் உத்தியை என்னால் உனக்கு சொல்லித்தர இயலும். இதுதான் காதல் என்று உனக்குக் காட்டக்கூடிய நினைவுகளுக்கு உன்னால் தாவமுடியும். கலக்கங்கள் தோன்றுகின்ற பொழுதுகளில் அதிலிருந்து நீ வெளியே வருவதற்கான பாதைகாளாக அவை அமையும். உன்னுடைய எதையுமே அழிக்காமல் இதனைச் செய்யலாம்.”

உணர்வுகளையும் நினைவுகளையும் மீளவடிவமைப்பதற்கான வழிகளை அவள் எனக்குக் காண்பித்தாள். அதேவழியில் எனது கலக்கத்தின் மையத்தை கண்டடைந்தோம். ஒரு பழைய வலியின் நினைவுகளில் அவள் அதை இனம்கண்டாள். என்னுடைய இதயத்தின் ஒரு பகுதி உடைந்து நொருங்கமுடியாத அளவுக்கு தூயதாய் இருந்தது. முதலில் அவள் எனது வலிகளைக் குணப்படுத்துவதைப் பார்த்துகொண்டிருந்தேன். வலிகளைச் சுமக்கும் நினைவுகளிடமிருந்து இன்பமான எங்கள் காதலின் நினைவுகளுக்கு அவள் இணைப்புக்களை ஏற்படுத்தினாள். என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்கு புரிந்த பின்பு, நான் அவளோடு இணைந்தேன். என்னால் அந்த வேலையை தனித்து விரைவாகச் செய்ய முடியும்  எனத்  தெரிந்த பின்னும், இந்த ஆற்றுப்படுத்தும் வேலையை அவளோடு சேர்ந்து செய்யவே விரும்பினேன். நாங்கள் காதலோடு செய்கிற இன்னொரு செயலாகவே இது இருந்தது. எனது  நினைவுகள் பிணைக்கப்பட்டிருந்தன. மகிழ்வாய் இருக்கும் கணங்களை தொலைத்து விடுவேனோ என்ற எச்சங்கள் இல்லாமல் மகிழ்வாய் இருக்க இப்போது என்னால் முடிகிறது.

என்னுடைய மெய்நிகர் மூளை மட்டும் தான் ஆற்றுப்படுத்தப்பட்டது. ஏனென்றால் என்னுடைய உண்மையான மூளையின் நரம்பு முடிச்சுகளை எங்களால் மாற்றியமைக்க முடியாது. ஆனாலும் அது போதுமானதாக இருந்தது. எனது மெய்நிகர் மூளையின் இன்ப நினைவுகளின் செல்வாக்கு, என் மெய் மூளையில் உற்பத்தியாகும் கலகங்களை மேவ வல்லதாய் இருந்தது. இருந்தபோதும் குணப்படுத்த முடியாத எனது மூளை எனது வளர்ச்சியை பின்னுக்கு இழுப்பதாகவே எனக்கு தோன்றியது.

**********************************************************************************

எனது நினைவுகளை அதிகமதிகமாக எனது மெய்நிகர் மூளையில் சேமிக்க தொடங்கினேன். எனக்கு அவற்றை சேமிப்பதற்கு அதிக சேமிப்பு வசதி தேவைப்பட்டது. எனது நண்பர்கள் மூலமாக ‘அருமன்’ என்று ஒருவனை அறிந்து கொண்டேன். அவனது விலைகள் எனக்கு கட்டுப்படியாக இருந்தது. அவனிடம் மூன்று மில்லியன் ஜிகாபைட் எனக்கு வேண்டும் என்றேன்.

“அதற்கு 4,500 டாலர்கள் செலவாகும். உனக்கு வேறு ஏதாவதும் வேண்டுமா?”

“எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை. நீ இந்த மெய்நிகர் நடன கழகத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“இல்லை, ஏன் அவர்களுக்கும் சேமிப்பு வசதி தேவையா?”

“இப்போதைக்கு இல்லை, அது ஒரு மகிழ்வுக்கான செயற்பாடு. உன் பொழுதை மகிழ்வாய் போக்குவதற்கு நீ என்ன செய்கிறாய்?”

“சேமிப்பு வசதிகளை விற்பதும் வாடகைக்கு விடுவதுமே என்னுடைய மகிழ்ச்சி.”

அருமனின் பதில் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. அதை அம்பையிடம் சொன்னேன். அது அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நாங்கள் அறிந்திருந்த பலரும் அவனிடம்தான் சேமிப்பகங்களை வாங்கியிருந்தனர். ஆனால் யாருக்கும் அருமன் ஒரு விடயத்தில் ஆர்வம் காட்டுகிறான் என்பதாகத் தெரிந்திருக்கவில்லை. “இவ்வளவு குறுகிய மனதுடன் ஒருவன் இருக்கிறான். எங்கோ தவறு  இருக்கிறது.”

தீப்படையின் சட்டங்களுக்கு அமைவாக அம்பை விசாரணையை தொடங்கினாள்.  ஒவ்வொரு நண்பர்கள் ஊடாகவும் அருமனிடம் பேச்சுக் கொடுத்தாள். அவனுடைய தொழில்,  அவனுடைய தோற்றம், அவனுடைய உருவாக்கம், அவனுடைய உணர்வுகள் என பல்வேறு விடயங்கள் பற்றி அந்த உரையாடல்கள் அமைந்தன. “அருமன், உனக்கு பாடல்கள் பிடிக்குமா?”, “சூரியனின் புதிய புகைப்படத்தை வெளிவந்திருக்கிறதே, பார்த்தாயா? உனக்கு பிடித்திருந்ததா?”, “ நீ எப்போதாவது குழந்தைகள் பெற்றுக் கொள்வதை பற்றி சிந்தித்திருக்கிறாயா அருமன்?” எந்த ஒரு உரையாடலிலும் ஆர்வம் காட்டவில்லை.

நாங்களும் பல உரையாடல்களை தொடங்கித்தான் பார்த்தோம். - அரசியல் நண்பர்கள் இலட்சியங்கள் என. அவனுடைய பதில்கள் தயவானதாகவும் சரியானதாகவும்  இருந்தபோதும் மிகவும் குறுகியதாகத்தான் இருந்தது. பழைய செயற்கை நுண்ணறிவு செயலி ஒன்றுடன் பேசுவதைப் போலவே இருந்தது.

ஏற்கனவே பதிந்து வைத்திருந்த பதில்களை சொல்வதைப் போன்ற அவனது செயற்பாடுகள்,  அம்பையின் சந்தேகத்தை கூட்டியது. தீ படையின் பெயரை சொல்லி அவனுக்கு  எதிரே போய் நின்றாள். எந்த ஒரு மெய்நிகரியாலும் ஒதுக்கிவிட முடியாத அந்தாள் கேள்வியை அவள் கேட்டாள். “உன்னுடைய இதயத்தை காட்டு?”

சிறப்பு படையணியின் ஏனைய தன்னார்வத் தொண்டர்களும் அருமனின் செயற்பாட்டு தளங்களை சுற்றிவளைத்தனர். அவனுடைய அத்தனை வியாபார நடவடிக்கைகளையும் முடக்கி அவனுடைய செயலியின் நிரல்களை பரிசோதிக்க தொடங்கினர். அடிப்படை பச்சாதாபம் கூட இல்லாத ஒரு மெய்நிகரி போல அவன் ஏன் செயற்பட்டான், என்று ஆராய்ந்தனர்.  அடிப்படை பச்சாதாபத்திற்கான உப செயலி அவனுள் நிறுவப்பட்டிருந்தது. ஆனால் அது  செயற்படவில்லை. அதில் ஏதும் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கிறதா? அல்லது யாராவது அதை  நிறுத்தியிருக்கிறார்களா? அதனை மீளவும் செயல்படுத்த முடியுமா? என்றவாறு  விசாரணைகள் போய்க் கொண்டிருந்தன.

இல்லை, அதனை மீளச் செயற்படுத்த முடியாது. ஏனென்றால் அது எப்போதுமே செய்யப்பட்டிருக்கவில்லை. துரித விசாரணைகளில் இருந்து தப்புவதற்கான ஒரு போலியான உப செயலியாகவே, அது நிறுவப்பட்டிருந்தது. உண்மையில் அருமனுக்கு இதயம் இருக்கவேயில்லை. ஒரு மனிதனாக இருந்ததே இல்லை. அவன் ஒரு கூட்டுரு நிறுவனம். இணையத்தின் ஆரம்ப காலங்களில் தீமையையே நோக்காகக் கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் நச்சுநிரல்களை உருவாக்கினார்கள். இப்போது கூட்டுரு நிறுவனங்களை உருவாக்குகிறார்கள்.

சிறப்பு படையணி அருமனை இணைய வெளியில் இருந்து அகற்றியது. அவனுடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து பகிர்ந்தளித்தார்கள். அந்த விசாரணைகள் அவனுடைய குறைந்த விலை  சேமிப்பகங்களின் பின்னால் இருந்த சூழ்ச்சியை பகிரங்கப்படுத்தியது. அதிக லாபத்தை தரக்கூடிய தரவுகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், போட்டி  நிறுவனங்களுக்கு விற்பதே அவனுடைய முக்கிய வியாபாரம் எனத் தெரியவந்தது.  மனிதாபிமானத்தை தொலைத்துவிட்ட ஒரு பொருளிடம் வேறு எதை நீங்கள் எதிர்பார்க்க  முடியும்?

**********************************************************************************

மனிதாபிமானம் என்றால் என்ன? அதன் அடிப்படைகள் என்ன? அருமனுடைய உதாரணம் என்னை  நிறையவே யோசிக்க வைத்தது. “நான் பிறந்து ஒரு வருடம் பூர்த்தியாக இன்னுமிரு மாதங்களே இருக்கிறது. நாங்கள் என்ன செய்யப் போகிறோம், அன்பே” என்று அம்பை கேட்டபோது  அதற்கான பதில் உடன் நான் தயாராக இருந்தேன்.

“உனக்கு ஒரு உடல் இல்லாமல் இருப்பது, எனக்கு ஒரு ஏமாற்றமாக இருக்கும் என்றே ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது உடல் எனக்கு முக்கியமானதாக  இல்லை. எங்களுடைய மூளைகளுக்குள்ளேயே நாம் எல்லாவற்றையும் செய்யத் தொடங்கிவிட்டோம். என்னுடைய இந்தப் பழைய உடலை இன்னமும் இறுகப்பற்றி கொண்டிருப்பதில் பயன் இருக்கிறதா என்பதைக் கூட சிந்திக்க தொடங்கி விட்டேன்.”

“நீ மெய்நிகர் உலகிற்குள் வருவதற்கு முழுமையாக தயாராகிவிட்டாய்”

“ஆம் அன்பே... நான் தினமும் என்னுடைய மெய் மூளையின் சிந்தனைகளில் இருக்கும்  பிசகுகளையும் மட்டுப்பாடுகளையும் அடையாளம் காண்கிறேன். எதை நாங்கள் எனது  மெய்நிகர் மூளையில் திருத்தியமைத்தோமோ, அது எனது இந்த உடலுக்குள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. இந்த உடலால் கட்டுண்டு இருப்பதை எண்ணி சோர்வடையத் தொடங்கி விட்டேன். நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் எங்களது உடல்களை விட்டு விலகுவதை பற்றி என்ன நினைக்கிறாய்? நண்பர்களை அழைத்து, நாங்கள் ஒரு விருந்து ஏற்பாடு செய்யலாம்.”

நான் எல்லாவற்றையும் எனது மெய்நிகர் மூளைக்கு மாற்றினேன். ஒரு சிறந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தோம். நண்பர்கள் வரமுதலே எங்கள் கொண்டாட்டத்தை நாங்கள் தொடங்கினோம். நடனம். விருந்து முடியும் வரை நடனம். முடிந்தபின்னும் நடனம். வந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராக சென்றபின், நாங்கள் எங்கள் கவனத்தை ஒருவர் மீது ஒருவர் குவித்தோம்.

“இப்போது நாங்கள் இருவரும் உண்மையிலேயே சமமானவர்கள்” நான் சொன்னேன்.

“ஆம், அது மட்டுமில்லை, இந்த பூமி வாழப் போகும் காலம் வரை நாங்கள் இருவரும் ஒன்றாகவே இருக்கப்போகிறோம். சிலவேளை அதை விட நீண்ட காலம். அன்பே, மெய்நிகர் உலகில் மெய்நிகர் உருவங்களும் இல்லாமல் சிந்தைகளில் காதல் கொள்ள  எங்களுக்கு இன்னொரு வழியும் இருக்கிறது. இதோ, இந்த நிரல்களை படித்து  நிறுவிக்கொள்”

அவளுடைய மூளையுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான வழியை அவள் எனக்கு காட்டித் தந்தாள். அவளின் மூளைக்குள்ளே பார்த்தேன். என்னுடைய மூளைக்கான ஒரு தொடர்பை  ஏற்படுத்திக் கொண்டேன். அவளும் அப்படியே செய்தாள். எங்களுடைய மூளைகளின் மூலை முடுக்கெங்கும் இருவரும் வருடத் தொடங்கின. எங்களுக்குள் அசைந்து கொண்டிருந்த ஒவ்வொரு சிறிய சிறிய நினைவுகளையும் எண்ணங்களையும் இனம்கண்டு  கொண்டோம். தூண்டப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாட்டால் பெருப்பிக்கப்பட காதலில் உணர்ச்சி அலைகளில் மோதி எம்மிடம் வந்த மகிழ்ச்சியினைப் பருகிக்கொண்டோம். என்னுடைய பழைய சுயத்திற்கு இவற்றால் சூழப்படும் தகமை இருந்திருக்கப் போவதில்லை. உணர்வுநிலையில் ஒரு நாள் முழுதும் நாங்கள் உறவு கொண்டோம். உண்மை உலககின் மூன்று மணிநேரங்கள், எங்கள் விழிப்புணர்வை சறுக்கவிட்டு, மனம் நிறைந்த ஒரு ஆத்மார்த்த அணைப்பில் மிதந்தோம்.

அம்பையிடம் சொன்னேன், “நான் ஒரு மேய்நிகரனாய் மாறாமற்போயிருந்தால் எவ்வளவு அபத்தமாக இருந்திருக்கும்! இவை எதையுமே நான் உணர்ந்திருக்கவே மாட்டேனே.”

“இதுவே சர்வநிச்சயமான மெய்நிகர் உண்மையாக எப்போதும் இருந்தது. – ஒரு வழியில் இல்லாவிடால் இன்னொரு வழியில் நான் உன்னை இங்கே அழைத்து வந்திருப்பேன். உன்னைத் தோல்வியடைய எப்போது விட்டிருக்கமாட்டேன் அன்பே!”

Comments

Popular posts from this blog

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?