சுதந்திரத்தின் இரண்டு அறைகள் - அத்தியாயம் 2
அணிலை என்னவென்று அழைப்பாய்? தென்னை மரத்தின் வட்டுகளுக்கு நடுவில் இருந்து இறங்கி வருகிறது, பாதி வளர்ந்த அணில் ஒன்று. பிள்ளைப்பருவம் கடந்த அணில். அது இறங்கும் வேகம் சொல்லிவிடுகிறது கூட்டைத் தாண்டிய அதன் அனுபவத்தின் மட்டுப்பாட்டை. அது பயந்து பயந்துதான் இறங்குகிறது. வளவின் ஒரு மூலையில் இருக்கும் தென்னையில் இருந்து இன்னொரு மூலையில் இருக்கும் கொய்யாவிற்கு செல்லவேண்டும். பைய இறங்கிவருகிறது. பைய நடை போடுகிறது. உண்மையில் அதைப் 'பையப் பாய்தல்' என்று சொல்ல விரும்புகிறேன். அந்த நடையில் அல்லது தவழுகையில் ஒரு அமைப்பு முறை இருக்கிறது, அது ஒரு தோரணம். தென்னை மரத்தின் தண்டில் இருந்து கால்களை சின்னதாய் உயர்த்தி சின்னதாய் நகர்த்தி வேகமாய் சில அடிகள். அப்படியே நிறுத்தி மரத் தண்டோடு ஒரு கணம் ஒட்டிப் படுக்கை. தலைதூக்கி சுற்றிப் பார்த்து ஆபத்தைக் கணித்து சிறிதாய் ஒரு பாய்ச்சலைத் தொடர்ந்து வேகமாயச் சில சின்ன அடிகள், பின்னொரு படுக்கை. பையப் பாய்தல் இது. மரத்திலிருந்து மதிலுக்கு தாவல். பின் மதிலிலும் பையப் பாய்தல். தோரணத்தை ஒத்த நடை. அதன் வாலாட்டாலும் தோரணமே. சுவற்றிலலோ மரத்திலோ ஒட்டிப் படுத்து அசையாது